இஸ்லாம் கூறும் குடும்பவியல்
MOHAMMED THAHA M.I.Sc
(மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய ரமளான் மாத தொடர் சொற்பொழிவுகளில் ஒன்றான "இஸ்லாம் கூறும் குடும்பவியல்' என்ற உரையை எழுத்து வடிவில் அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். குடும்பவியலின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியிருந்த இந்த சொற்பொழிவை, ஏகத்துவம் இதழில் தொடராக வெளியிட எண்ணியுள்ளோம், இன்ஷா அல்லாஹ். வாசகர்கள் படித்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்).
இஸ்லாமிய மார்க்கம் எந்தப் பிரச்சனையில்
தலையிட்டாலும் அதில் முழுமையாகவும் தெளிவாகவும் அறிவுக்குப் பொருத்தமாகவும்
நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் அணுகக் கூடிய ஒரு மார்க்கம். அந்த அடிப்படையில்
குடும்பவியலைப் பற்றி இஸ்லாம் எத்தகைய நெறிமுறைகளை நமக்குச் சொல்லித் தருகிறது
என்பதை இந்தத் தொடரில் பார்க்கவிருக்கிறோம்.
இதற்குக் காரணம் கடந்த காலங்களிலிருந்து
தற்போதைய நிலையைக் கவனிக்கும் போது குடும்ப அமைப்பு நம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக
சிதைந்து வருகிறது. இப்படியெல்லாம் குடும்பங்கள் சீரழிவை நோக்கிச் செல்லக் காரணம், முஸ்லிம்கள்
இஸ்லாம் கூறும் குடும்பவியல் சட்டங்களைத் தெரியாமல் இருப்பது தான், அல்லது
அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படாமலேயே இருப்பது தான்.
எனவே இந்தத் தலைப்பிலுள்ள செய்திகளை
முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றுகூடச் சொல்லலாம்.
குடும்பவியல் என்றால் என்ன?
முதலாவதாக, அல்லாஹ் எந்தெந்த படைப்புகளை, உயிரினங்களையெல்லாம்
நேரடியாகப் படைத்திருக்கிறானோ அவற்றை இனப்பெருக்கம் செய்கிற வகையில்
படைத்திருக்கிறான். அல்லாஹ் படைத்தவை மட்டும்தான் ஒன்றிலிருந்து இன்னொன்று
உற்பத்தியாகின்ற வகையில் இருக்கும்.
மனிதர்கள் எதையாவது உற்பத்தி செய்தால், அது இன்னொன்றை
உற்பத்தி செய்யாது. ஒரு மனிதன் பேனாவையோ அல்லது மைக்கையோ உற்பத்தி செய்கிறான்
என்று வைத்துக் கொள்வோம். அந்த மைக்கோ பேனாவோ குட்டி போடாது. இனப்பெருக்கம்
செய்யாது. முதலில் ஒரு பேனாவை எப்படித் தயாரித்தார்களோ அதே போன்று மற்ற பேனாக்களையும்
தயாரிக்க வேண்டும். இது மனிதனின் படைப்பு.
ஆனால் ஒரே இறைவனாகிய அல்லாஹ், முதலில் ஆதம்
(அலை) என்கிற முதல் மனிதனைப் படைக்கிறான். அவரது விலா எலும்பிலிருந்து அவருக்குரிய
துணையான ஹவ்வா (அலை) அவர்களைப் படைக்கிறான். இந்த இருவரிலிருந்து
இனப்பெருக்கத்தைத் தொடங்கி இன்று கோடான கோடி மனிதர்களாக உருவாகியிருக்கிறோம்.
ஆனால் நேரடியாக இறைவன் படைத்தது, முதலில்
படைத்த ஆதாம், ஹவ்வா என்கிற ஒரு ஜோடியை மட்டும் தான். மற்றவையெல்லாம்
அவ்விருவரிலிருந்தும் பல்கிப் பெருகியவர்கள் தான். இதே போன்று மனிதனல்லாத மற்ற
படைப்புகளான ஆடு, மாடு, கோழி போன்ற எண்ணற்ற ஜீவராசிகளில் ஒவ்வொரு ஜோடியைத் தான்
அல்லாஹ் படைத்தான். அதுதான் பல்கிப் பெருகி இன்று பல உயிரினங்களாக வளர்ந்திருப்பதை
நாம் பார்க்கிறோம்.
அதேபோன்று தாவரங்களை எடுத்துக் கொண்டாலும்
ஒரேயொரு விதையிலிருந்து ஏராளமான மரங்களையும் செடி, கொடிகளையும் அல்லாஹ்
உருவாக்கியிருக்கின்ற அதிசயத்தைப் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொரு உயிரினமும்
பல்கிப் பெருக வேண்டும் என்பதற்காக அவற்றிற்கு மத்தியில் ஆண், பெண் என்ற
இரண்டு இனத்தை உருவாக்கி, ஒன்றையொன்று கவரக்கூடிய வகையில் அவற்றில் ஒரு ஈடுபாட்டை
ஏற்படுத்தி, அதன் மூலம் அல்லாஹ் உயிரினங்களைப் பெருகச் செய்கிறான்.
தாவரங்கள் உட்பட ஒவ்வொரு உயிரினத்திலும்
அவைகளில் தானாகக் கவரக்கூடிய வகையில் இல்லாவிட்டாலும், அவைகளிலும்
கூட ஆண், பெண் என்ற
இரண்டு இனங்களைப் பார்க்க முடிகிறது. பூக்களில் ஆண் பூ என்றும் பெண் பூ என்றும்
இருக்கிறது. ஆண் பூவும் பெண் பூவும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டும் தான் பூக்கள்
காய்க்க முடியும். இதே போன்று தான் எல்லா வகையான உயிரினங்களையும் அல்லாஹ்
படைத்திருக்கிறான்.
மனித இனத்திற்கு மட்டுமே குடும்ப அமைப்பு
இப்படி எல்லாமே ஆண், பெண் என்கிற
இனக்கவர்ச்சியின் மூலம் பெருக்கக் கூடியதாக இருந்தாலும், மனிதனுக்கு
மட்டுமே குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிறது. ஆடு, மாடு, கோழி போன்றவைகளில் ஆணும் பெண்ணும்
இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் அவற்றுக்கு மத்தியில் குடும்பம் என்கிற ஒரு
நிர்வாக அமைப்பு கிடையாது. அவை இனப்பெருக்கத்திற்காகச் சேர்வதோடு தங்களது வேலையை
முடித்துக் கொள்ளும். அதற்குப் பிறகு ஏற்படுகிற சுமைகளை அவை ஏற்பது கிடையாது.
இவற்றில் பெண் இனம் தான் எல்லா விளைவுகளையும் சுமந்தாக வேண்டும்.
உதாரணமாக, ஒரு ஆண் ஆடும் ஒரு பெண் ஆடும் இணைந்து
சேர்க்கையில் ஈடுபட்டு, பெண் ஆடு சினையாகி விட்டதெனில், அதற்குரிய எல்லா கஷ்ட நஷ்டங்களையும்
பெண் ஆடு மட்டும் தான் சுமக்கும். ஆணுக்கு எந்தவிதமான பொறுப்பும் கிடையாது. இனச்
சேர்க்கையில் ஈடுபட்டதோடு தனது வேலையை ஆண் ஆடு முடித்துக் கொள்ளும், தன்னால் தானே
இந்தப் பெண் ஆட்டிற்குச் சினை ஏற்பட்டது; அதற்கு ஏற்படுகிற கஷ்டத்தில் நாமும் பங்கு
எடுத்துக் கொள்வோம் என்று சிந்திக்க, செயலாற்றுகின்ற எந்தப் பகுத்தறிவும்
விலங்குகளுக்குக் கிடையாது. இதே போன்று தான் கோழியின் சிரமத்தில் சேவல்
பங்கெடுக்காது, பசு மாட்டின் கஷ்டத்தில் காளை மாடு பங்கெடுக்காது.
ஆனால் மனிதன் பகுத்தறிவுள்ளவனாக இருப்பதால், ஆணும்
பெண்ணும் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதினால், பெண் வயிற்றில் சுமக்கிற குழந்தைக்கு நாம் தான்
காரணம் என்பதை ஒவ்வொரு ஆணும் ஏற்றுக் கொள்கிறான். நாமே இதற்குப் பொறுப்பாளியாக
இருக்கிறோம். எனவே நாமும் பெண்ணின் சிரமத்தில் கவனத்துடன் பொறுப்பெடுத்தாக
வேண்டும் என்ற ஒரு சிந்தனை பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தான் இருக்கிறது.
இப்படி நல்ல எண்ணத்தில் தான் குடும்பம் என்கிற ஒரு அமைப்பை மனிதன்
உண்டாக்குகின்றான்.
குடும்பம் என்கிற அமைப்பு இல்லாமல், நீ எனக்கு
மனைவி, நான் உனக்குக்
கணவன் என்கிற கட்டுக் கோப்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
வாழலாம் என்கிற நிலைக்குள் போய்விட்டால், பெண்களின் சிரமங்களை பெண்கள் மட்டுமே சுமக்கிற
அவல நிலை ஏற்பட்டுவிடும். ஆண்கள் அதில் எந்தவிதப் பங்கையும் எடுத்துக் கொள்ள
மாட்டார்கள். குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு கெட்டுவிட்டால் பெண்கள் பாரதூரமான
துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இப்படியான அவல நிலையைத் தவிர்ப்பதற்குத் தான்
ஆதிகாலத்திலிருந்தே, ஆதம் நபி காலத்திலிருந்தே அல்லாஹ் குடும்ப அமைப்பை உருவாக்கி
வைத்திருக்கிறான்.
ஆதமைப் படைத்து, அல்லாஹ்வே அவருக்கு ஒரு ஜோடியையும்
கொடுத்து, நல்லது
கெட்டதையெல்லாம் சுமக்க வேண்டும் என்றாக்கி, ஆணாக இருக்கிற நீ தான் உனது மனைவியைப்
பராமரிக்க வேண்டும் என்றாக்கி, முதல் மனிதனாகிய ஆதம் முதலே குடும்ப அமைப்பை உருவாக்கினான்.
அப்படி ஆதம் நபி மூலம் உருவாக்கிய அந்த அமைப்பு தான் இன்று உலகம் முழுவதும்
குடும்ப அமைப்பாக இருந்து கொண்டிருக்கிறது.
குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் காரணங்கள்
சமீப காலமாகப் பார்த்தால், இந்தக்
குடும்ப அமைப்பைச் சீரழித்துப் பாழாக்கக் கூடிய பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள்
மத்தியில் தூவப்படுகின்றன.
குடும்பம் என்கிற எந்த அமைப்பும் நிர்வாகமும்
தேவையில்லை என்றும், அப்படி ஏன் இருக்க வேண்டும்; அப்படித்தான் இருந்தாக வேண்டும்
என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றும், ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் சந்தோசமாக
இருக்கலாம்; அதே போன்ற உரிமைகள் பெண்களுக்கும் இருப்பதால் ஒரு பெண்ணும்
தான் விரும்பியவாறெல்லாம் வாழ்ந்து கொள்ளலாம் என்றும், குடும்பம்
என்ற எந்தக் கட்டுக்கோப்பும் நமக்குத் தேவையில்லை என்றும் அறிவு ஜீவிகள் என்று
பிதற்றிக் கொள்கின்றவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அதை மிகப் பெரிய
நாகரீக வளர்ச்சியாகக் காட்டி ஊடகங்கள் தவறான பிரச்சாரம் செய்வதையும் பார்க்க
முடிகிறது.
குடும்பத்தைச் சீரழிக்கும் காரணங்கள்
என்னவென்று நாம் ஆய்வு செய்தால் அவற்றில் மிக முக்கியமான மூன்று காரணங்களைச்
சொல்லாம். மனிதனை வழிகெடுப்பதற்காக ஷைத்தான் இந்த மூன்று செயல் திட்டங்களையும்
பயன்படுத்துகிறான். அந்த மூன்று தவறான செயல் திட்டங்களில் முதலாவது துறவறமாகும்.
துறவறம்
ஓர் ஆணுக்கு ஒரு பெண் தேவை கிடையாது. அதே
போன்று ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை கிடையாது. இல்லறம் என்ற சேர்க்கை உறவும்
தேவையில்லை. நமது ஆசாபாசங்களையெல்லாம் துறந்துவிட்டு கடவுளுக்காகவே வாழ்வை
அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்படுவதே துறவறமாகும்.
கடவுளுக்காக தவம் இருக்க வேண்டும்; தியானத்தில்
இருக்க வேண்டும் என்றெல்லாம் கடவுளுக்காகத் தன்னையே அர்ப்பணிப்பதை புனிதமாகக்
கருதுவது பல மதங்களில் மிக முக்கிய கோட்பாடாக இருப்பதைக் காணமுடிகிறது. இப்படித்
துறவிகளாக இருப்பவர்கள் தான் அந்த மதத்தின் பீடாதிபதிகளாகவும் ஞானிகளாகவும் பெரிய
அறிவாளிகளாகவும் கருதப்படுகிறார்கள். குடும்பத்தில் ஈடுபட்டு, பிள்ளை
குட்டிகளைப் பெற்று, சமூகத்தோடு வாழ்கிற நம்மையெல்லாம் விடச் சிறந்த மக்களாக
துறவிகள் எல்லா மதங்களிலும் கருதப்படுகிறார்கள்.
இந்தச் சிந்தனை எல்லோருக்கும் வந்தால்
மனிதகுலம் முடிந்துவிடும். ஏதோ இலட்சத்தில் ஒருவன் இந்தத் துறவறம் என்ற
சிந்தனையில் இருப்பதால் உலகம் இயங்குகிறது. துறவறம் எனும் இந்த வியாதி பரவி, உலகத்திலுள்ள
அனைவரும் துறவறத்தை முடிவாக எடுத்தால், அத்தோடு உலகம் முடிந்து விடும். பிள்ளைகள்
பிறக்காது. கியாமத் நாள் என்ற உலக முடிவு நாள் வருவதற்கு முன்பாகவே மனித சமூகம்
அழிந்துவிடும்.
எனவே குடும்ப வாழ்க்கை தேவையில்லை, துறவறமே கதி
என்று வாழ்வது ஷைத்தானின் மாய வலையாகும்.
ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் இந்தத்
துறவறத்திற்குச் சாட்டையடி கொடுத்து விரட்டியடிக்கிறது. துறவை மாபெரும் குற்றமாகக்
கருதி வன்மையாகக் கண்டிக்கின்றது. இருப்பினும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு
முன்னாலுள்ள முஸ்லிம்களும் துறவறம் என்ற தாக்குதலுக்குள் சிக்கப்பட்டிருந்தனர்
என்பது தான் உண்மை. இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணிப்பது புனிதமாக
முஸ்லிம்களிடத்திலும் பரவி இருந்தது.
தற்போது ஏகத்துவ சிந்தனை எழுச்சி தமிழகத்தில்
எடுத்துச் சொல்லப்பட்ட பிறகு அது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தும் இருப்பதால், துறவறம்
இஸ்லாத்தில் கூடாது, அது குற்றம் என்று மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டனர்.
எந்தளவுக்குத் துறவறத்தை முஸ்லிம்கள் கடந்த
காலத்தில் ஆதரித்தார்கள் எனில், துறவறத்தைக் கடைப்பிடிப்பவர் அவ்லியாக்களாகவும் மகான்களாகவும்
பார்க்கப்பட்டார்கள். மகான் என்பதற்கு அடையாளமே துறவறம் என்று சொல்கின்ற
அளவுக்குத் தவறான வழியில் இருந்தார்கள்.
மேலும், திருமண வாழ்க்கையையும், பிள்ளை
குட்டிகள் பெற்றுக் கொள்வதையும், சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதையும் கொச்சைப்படுத்தி
பிரச்சாரமும் செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு உதாரணமாக, குணங்குடி
மஸ்தான் என்ற ஒரு அவ்லியாவைச் (?) சொல்லலாம். இவர் முஸ்லிம்களால் மதிக்கப்படுகிற மகான். இவரது
பெயரில் சென்னை தண்டையார் பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் தர்ஹா இருக்கிறது. இவர்
தனது பாட்டில் பெண்களைக் கொச்சைப்படுத்தி ஏசியுள்ளார்.
சங்கையும் போக்கி சதி மானமாக
சகசென்டியாக்கி வித்திடுவாள்
வெகு பங்கப்படுத்திட்டுவாள்
அந்த மங்கையர் ஆசை வைத்தைய்யய்யோ வையத்தில்
பெண்கொண்ட பெயர்பட்ட பாட்டையும் கேட்டையும்
பேசுவோமே நெஞ்சமே!
"இந்தப் பெண்கள் ஆண்களுக்கு இருக்கிற
மரியாதையை எல்லாம் போக்கி விடுவார்கள்; வெட்கங்கெட்ட செயல்களை நம்மைச் செய்ய
வைத்துவிடுவார்கள்; நம்மைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இப்படிப் பெண்கள் மீது
ஆசை வைத்து, கேடுகெட்டு விட்ட உன் பாட்டையும் கேட்டையும் பேசுவோமா?'' என்று
கேட்கிறார்.
இதன் மூலம் பெண்கள் ஆண்களின் மரியாதையைக்
கெடுத்துவிடுவார்கள் என்றும், கேவலப்படுத்துவார்கள் என்றும் இஸ்லாத்தின் போர்வையில் கவிதை எழுதுகிறார்.
இந்தக் கவிதைகள் ஒரு காலத்தில் மஸ்தானுடைய பாடல்கள் என்று பள்ளிவாயில்களில்
பாடப்பட்டுக் கொண்டிருந்தன.
தங்க நகையும் முகப்பணி சேலையும்
தாவெனவே குரங்காட்டுவாள்
பெண் என்பவள் தங்க நகை வேண்டும்; நல்ல அழகழகான
சேலைகளும் துணிமனிகளும் வேண்டும் என்று ஆண்களை ஆட்டுவாள் என்று பெண்கள் சமூகத்தை
ஊனப்படுத்துகிறார்.
ஆதியைத் தேடி அருள்பெற நாடி
அழுதழுது மடிபிடிப்பாள்; நீதான்
ஏதென்னை விட்டு பிரிவதுமென்றவள்
ஏங்கியேங்கி துடிதுடிப்பாள்
அல்லாஹ்வைத் தேடி நாம் துறவறத்திற்குச்
சென்றால், நமது மடியைப்
பிடித்து அழுது துறவறத்திற்குத் தடை செய்வாள். அல்லாஹ்விற்காக எங்காவது போகலாம்
என்று நினைத்தாள் ஏங்கியேங்கி துடிதுடிப்பாள்.
நாடிக் குருவடி தேடிநடக்கிற
நற்செயலைக் கசப்பாக்குவாள்
குருவடி என்றால் சேக், முரீது என்று
பொருள். முரீது வாங்கிக் கொண்டு ஷேக்குடன் செல்லுவதைக் கசப்பாக்குவாள். அவருடன்
போகாதே, என்னுடனே இரு
என்று கூறுவாள்.
ஓடித்திரிந்தேயலைந்து பணங்கள்
ஓருக்காலே தேடென்று தாக்குவாள்
தேடும் பொருள்தனை காணிலும்
தேசத்தில் யார் என்று தூக்குவாள்
ஓடி ஓடி உழை என்று காசு பணத்தாசை காட்டுவாள், ஓடியாடி
உழைத்துக் கொட்டினால் உலகத்தில் உன்னை மாதிரி யாரும் உண்டா? என்று
பாராட்டுவாள். இப்படியெல்லாம் பெண்களைக் கேவலப்படுத்துகிறார். பெண்கள் என்றால்
நச்சுப் பாம்பு போன்று என்று தவறான சித்தரிப்பை உண்டாக்குகிறார்.
ஆடென்றும் மாடென்றும் வீடென்றும்
தேடென்றும் ஆண்டவனை மறப்பாக்குவாள்
ஆடு, மாடு, வீடு போன்றவை வேண்டும் என்பதற்காக ஆண்டவனையே
மறக்கச் செய்திடுவாள் என்று படிக்கிறார்.
இப்படியெல்லாம் இஸ்லாத்தின் பெயரால், குடும்ப
வாழ்க்கை வேண்டாம், அவரவர் தன்னை மட்டும் காத்துக் கொண்டால் போதும் என்று கூறும்
துறவறம் ஒரு நல்ல சித்தாந்தமாகக் கடந்த காலங்களில் கருதப்பட்டு வந்துள்ளது
என்பதற்கு இவை சான்றாக இருக்கின்றன.
திருமணமே வேண்டாம் என்று சொல்லி
புறக்கணித்தவர்களும் திருமணம் முடிக்காமலேயே வாழ்நாளைப் பாழாக்கியவர்களும்
இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்; அவர்கள் ஒருபோதும் இறைநேசர்களாக இருக்கவே முடியாது என்ற உண்மை
தெரியாமல், துறவறம்
மேற்கொள்ளுபவர்கள் மகான்களாகவும் அவ்லியாக்களாகவும் இருப்பார்கள் என்ற தவறான
எண்ணம் முஸ்லிம்களிடமும் இருந்தது என்பதற்கும் இவை சான்றுகளாகும்.
ஆனால் இஸ்லாம் இந்தக் கொள்கையை வன்மையாகக்
கண்டிக்கிறது. திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும்
அவசியம். திருமண வாழ்க்கையை யாராவது ஒருவர் புறக்கணித்தால் அவர் இஸ்லாத்தில்
இருக்கவே முடியாது எனும் அளவுக்குத் துறவறத்தை இஸ்லாம் அறவே இல்லாமல் ஒழிக்கிறது.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு
மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத்
தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து
மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட
நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்கüல் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன்
என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே
இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு
நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும்
ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, "இப்படி
இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின்
மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து
நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர்
என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள் அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 5063
எனவே திருமண வாழ்க்கையைப் புறக்கணிப்பவர்கள்
இஸ்லாத்தைப் பின்பற்றுபவர் இல்லை என்று நபிகள் நாயகம் பிரகடனப்படுத்துகிறார்கள்.
அதாவது திருமணத்தை முஸ்லிம் என்பதற்கான அடையாளமாக நபிகள் நாயகம் மனித
சமூகத்திற்குக் காட்டித் தருகிறார்கள்.
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்ததும், ஹிஜ்ரத்
செய்து வந்தவர்கள் அளவுக்கு மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில்
ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே
இருந்தனர். பத்து ஊரைச் சேர்ந்த ஆண்களுக்கு ஒரு ஊரில் பெண்கள் கிடைக்க
மாட்டார்கள். உதாரணத்திற்கு 200
பேர் இருக்கின்ற ஊரில் 100 ஆண்கள்
நுழைந்தால் ஆண்கள் அனைவருக்கும் பெண்கள் கிடைக்க மாட்டார்கள். அதாவது அந்தந்த
ஊரில் இருப்பவர்களுக்கு அந்தந்த ஊரில் பெண் கிடைத்துவிடும்.
இந்நிலையில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு
வந்துள்ள எங்களுக்குப் பெண் கிடைக்கவில்லை என்று ஸஹாபாக்கள் நபியவர்களிடம் புகார்
தெரிவிக்கிறார்கள். அப்போது நபியவர்கள், திருமணத்திற்குச் சக்தியிருந்தால் திருமணம்
முடியுங்கள். அதற்கு வாய்பில்லையென்றால், அவர் நோன்பு வைத்துக் கொள்ளட்டும் என்றார்கள்.
திருமண முடிக்க பொருளாதார வசதி இல்லையென்றாலோ
அல்லது பெண் கிடைக்காமல் இருந்தாலோ அவர் நோன்பு வைத்து, தமது
ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, துறவறம்
மேற்கொள்ளக் கூடாது. ஒருவேளை நமக்கு வாய்ப்பு வந்துவிட்டால் நாம் நோன்பு வைப்பதை
நிறுத்திக் கொள்ளலாம். நோன்பு வைத்துக் கொண்டால் ஒரு மனிதன் பாதுகாப்புப்
பெறுவான்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று
பழமொழியெல்லாம் சொல்லுவார்கள். பசி வந்துவிட்டால் இந்த மாதிரியான நாட்டங்கள்
வராது. அல்லது தூண்டுதல் குறைவாக இருக்கும். எனவே திருமணத்திற்குச்
சக்தியில்லாதவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற சட்டத்தைக் கொண்டு, திருமணம்
முடிப்பதன் அவசியத்தை நமக்கு நபிகளார் விளக்குகிறார்கள். இது திருமணத்தை
வலியுறுத்திச் சொன்ன செய்தியாகும்.
"இளைஞர்களே! உங்கள் தாம்பத்தியம் நடத்த சக்தி
பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்.
ஏனெனில், நோன்பு (ஆசையைக்)
கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள்.
(நூல்: புகாரி 5065, 5066)
வளரும் இன்ஷா அல்லாஹ்....
0 comments:
Post a Comment