Saturday, July 16, 2011

அறிஞர் பீ.ஜெ. அவர்களின் வரலாறு, தொடர் - 4

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்
தொடர்-4
எம்.ஏ.ஹபீழ் ஸலபி,இலங்கை.

சமூக உணர்வு:


இஸ்லாமிய வரலாறு தன்னுள் பதித்து வைத்துள்ள, இஸ்லாத்தை ஆழமாகக் கற்ற சீர்திருத்தவாதிகளிடம் வெறும் சிந்தனை மட்டுமல்லாது, உணர்ச்சி பூர்வமான உள்ளமும் செயல் திறனும் வேகமும் விவேகமும் சமூக அக்கறையும்  காணப்படுவதை அவதானிக்கலாம்.

சமகால சீர்திருத்தவாதி என்ற வகையில் ஏகத்துவப் பிரசாரத்தை துவக்க முன்னரே பீஜேவிடம் சமூக உணர்வு மிகுதியாக இருந்துள்ளது. அதே போல் அவரது மூத்த சகோதரர் அறிஞர் பீ.எஸ்.அலாவுத்தீன் அவரிடமும் இந்த உணர்வு இருந்தது என்பதை உணர்வுப் பத்திரிகையில் அவரது இளைய சகோதரர் ஹஜா அலாவுத்தீன் எம்.ஏ. அவர்கள் இவ்வாறு பதிவுசெய்கின்றார்.

‘…பல்வேறு வகையான ஊர் மக்கள் பிரச்சினைகளுக்காகவும் இச்சகோதரர்கள் அக்கால கட்டத்தில் போராடினர். இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

அவர்களின் சொந்த ஊரான தொண்டிக்கு அருகில் உள்ள தாலூகாத் தலைநகரான திருவாடானை என்ற ஊருக்கும் பல ஆண்டுகளாக நகரப் பேருந்து இல்லாத நிலையிருந்தது. இதற்கென போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் உள்ளுர் அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்டபோது, அவர்களோடு இணைந்து போராடி நகரப் பேருந்துகள் வசதி பெற்றுத் தந்ததில் இச்சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என உள்ளுர்வாசிகள் இன்றும் கூறுகிறார்கள்.(உணர்வு உரிமை:12 குரல்:36)

உறங்கிக் கொண்டிருந்த ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்தையும் நோக்கி அவர் விழித்தெழுமாறு தனது பிரசாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே குரல் எழுப்பினார்.வீரியமான ஏகத்துவப் பிரசாரத்தோடு சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் என்பதற்கு அவர் அல்ஜன்னத்தில் தீட்டிய பல ஆசிரியர் தலையங்கங்கள் மற்றும் அவர் ஆற்றிய சமூக உணர்வுமிக்க உரைகள் என்பன மறுக்கமுடியாத ஆதாரங்களாக உள்ளன.

முஸ்லிம் சமுதாயத்தை ஏய்த்துப் பிழைக்கும் தகுதியற்ற தலைமைகளை அவர் தாட்சண்யமின்றி விமர்சித்தார். அந்த நேரத்தில் இவ்வாறு புரட்சிகரமாக ஏழுதுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலகட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமல்லாது,பல் சமூகத்தாரையும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட இனத்தை நோக்கியும் இஸ்லாமிய அழைப்பை விடுத்துள்ள பாங்கு ஓர் வித்தியாசமான அழைப்புப் பணிக்கான புதிய அத்தியாயமாக உள்ளது.

அல் ஜன்னத் நுழைவாயிலில் ‘உறக்கம் கலையட்டும்!  ஒரு சமுதாயம் விழித்துக் கொண்டது!!’ என்று அவர் தீடடிய தலையங்கம் ஆரம்பத்திலேயே இருபது கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் உறக்கத்தையும் அவல நிலையையும் வேதனையுடன் நினைத்துப் பார்க்கக் கூடிய சமூக உணர்வை வெளிக்காட்டுகிறது. இதைப் படிக்கும் யாரும் அதை நன்கு புரிந்து கொள்ளலாம்.

‘இந்தியாவில் மதத்தால், சாதியால் பல்வேறு சிறுபான்மைச் சமுதாயங்கள் இருக்கின்றன. மதச் சிறுபான்மையினரில் முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் சீக்கியர்களையும் குறிப்பட்டுச் சொல்லலாம்.

மூன்று கோடி மக்களைக் கொண்ட கிறித்தவச் சமுதாயம் சமீபத்தில் நாடு தழுவிய அளவில் நடத்திய மாநாடுகளும் பேரணிகளும் அந்தச் சமுதாயம் விழித்துக் கொண்டு விட்டதைத் தெளிவாக அறிவித்தன. இந்தச் சமயத்தில் இருபது கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் உறக்கத்தையும் அவல நிலையையும் வேதனையுடன் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
 
இம்மாநாடுகளும் பேரணிகளும் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டன.
 
இந்து மதத்தில் பல்வேறு சாதிகள் உள்ளன. ஒரு சாதியில் பிறந்துவிட்ட காரணத்தினால் தங்களை எல்லா வகையிலும் உயர்வாகக் கருதி ஆட்சி, அதிகாரம், மதத்தலைமை ஆகியவற்றைத் தம் கைப்பிடியில் வைத்துக்கொண்டு, வளமாக வாழ்ந்து வரும் சாதியினரும் அம்மதத்தில் உள்ளனர். இவர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, நாயினும் கீழாக நடத்தப்பட்டு வரும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் அம்மதத்தில் உள்ளனர்.
 
இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் சலுகைகளும் வழங்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்களது கல்வித் தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காகவே இச்சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் அறிவுடைய மக்களுக்குத் தெரிந்தே இருந்தது.
 
ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப் பட்டவர்களும் ஓரளவு தன்னுணர்வு பெற்றனர். தம்மை இழிவு படுத்திய இந்து மதத்தை அவர்கள் கை கழுவி விடக்கூடாது என்பதும் அவர்கள் மீது குத்தப்பட்ட கீழ்ச்சாதி முத்திரை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதும் தான் இந்தச் சலுகைகளின் உண்மையான நோக்கம்.
 
இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கிறித்தவ மதத்தை ஏற்றால் இச்சலுகைகள் ரத்துச் செய்யப்படுவதிலிருந்து இச்சலுகையின் நோக்கத்தை அறியலாம்.
 
தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கிறித்தவ மதத்தைத் தழுவினால் முன்பு வழங்கப்பட்டது போன்ற சலுகைகள் தொடர வேண்டும் என்பது இம்மாநாடுகளின் முதல் கோரிக்கை.
 
பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற ஒரே காரணத்துக்காக சிறுபான்மையினரை அடிமைகளாகவும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் — மத்திய மாநில அரசுகளின் பரிபூரண ஆசியுடன் — மதவெறிப் பிரச்சாரம் செய்து வரும் கூட்டத்தினர், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி வருகின்றனர்.
 
மத்திய அரசினதும் உ.பி. மாநில அரசினதும் முழு ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் இந்தக் குண்டர்கள் பாபரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்ததையும் ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே அது கோவிலாக மாற்றப்பட்டதையும் நாடு இன்னும் மறக்கவில்லை. இதனால், நாட்டுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இன்னும் பரிகாரம் காணப்படவில்லை.
 
பாண்டிச்சேரியில் புனித ஜென்மராக்கினி மாதா பேராலயம் உள்ளது. இந்தப் பேராலயம் இருக்கும் இடத்தில் வேதபுரீஸ்வரர் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை இடித்துத்தான் அந்த இடத்தில் இந்தத் தேவாலயம் எழுப்பட்டது என்று இந்து மத வெறிக்கூட்டம் நவீன கண்டுபிடிப்பை இப்போது வெளியிட்டுள்ளது.
 
அந்தப் பேராலயத்தில் திடீரென நுழைந்து கற்பூர ஆராதனை செய்தும் அந்த ஆலயச் சுவற்றில் ஓம் என்று எழுதியும் அராஜகம் செய்தது இந்தக் கூட்டம். அந்த ஆலயத்தைக் கைப்பற்றப் போவதாகவும் சபதம் செய்திருக்கிறது இந்து வெறிக் கும்பல்.
 
சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்புத் தந்து விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் மற்றொரு கோரிக்கை.
 
சிறுபான்மைச் சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகச் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் இம்மாநாடுகளில் ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றன.
 
முஸ்லிம் சமுதாயம் இதைவிடப் பெரிய மாநாடுகளை நடத்தியதில்லையா? நடத்தியிருக்கிறது? தலைவர்களுக்கு ஜிந்தாபாத் போடுவதற்காக மாநாடுகளை நடத்தி இருக்கிறது! பள்ளிவாசலை இடிக்கத் துணை நின்றவர்களை ஆதரித்து மாநாடுகளை நடத்தியுள்ளது! சமுதாயத்தின் ஓட்டுக்களைத் துரோகிகளுக்குப் போடச் சொல்லி மாநாடுகளை நடத்தியுள்ளது! இப்படி ஏராளமான மாநாடுகளை நடத்தி இருக்கிறது!
 
முஸ்லிம் சமுதாயத்தின் வறுமையை விரட்டி, சமுதாயத்தை முன்னேற்றக் கூடிய வகையில் ‘காயிதேமில்லத் மாவட்டம்’ அமைக்கும் மகத்தான கோரிக்கையை முன் வைத்து மாநாடுகளை இந்தச் சமுதாயம் நடத்தியுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கக் கூடிய வகையில், புலவர்களும் தலைவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்ப வேண்டும் என்ற புனிதமான கோரிக்கையை முன்வைத்து மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
 
இப்படிப்பட்ட உருப்படியான(?) கோரிக்கைகளுக்குத்தான் இந்தச் சமுதாயத்தை அதன் தலைவர்கள் திரட்டியுள்ளனர்.
 
முஸ்லிம்களை விடப் பல மடங்கு குறைந்த எண்ணிக்கை கொண்ட சமுதாயம், பிரபலமான தலைவர்களைப் பெற்றிராத சமுதாயம், தனக்கெனத் தனியாக நாளிதழ் நடத்த முடியாத சமுதாயம் தனது மதத்துக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உணர்ந்து அதற்காப் போராடுகிறது!
 
முன்பொரு முறை சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களுக்கு எதிரான சட்டத்தைச் சிறுபான்மை மக்களின் நலனில் அக்கரையில்லாத ஜெயலலிதாவின் அரசு கொண்டு வந்த போதும் முஸ்லிம் சமுதாயமும் அதன் தலைவர்களும் தூக்கத்தில் தான் கிடந்தனர். நினைவுச் சின்னங்கள் எழுப்புவதை விடக் கல்விக் கூடங்கள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தவையா? என்ற எண்ணம் தான் அதன் தலைவர்களுக்கு இருந்தது. இந்தச் சமயத்தில் கிறித்தவ சமுதாயம் தான் மக்கள் சக்தியை இந்தச் சட்டத்துக்கு எதிராக ஒன்று திரட்டி வாபஸ் பெற வைத்தது.
 
இப்போது தனது வழிபாட்டுத் தலத்துக்கு ஆபத்து என்றவுடன் – மதம் மாறியவர்களுக்குச் சலுகைகள் மறுக்கப்பட்டால் தனது மதத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றவுடன் — மீண்டும் சிலிர்த்து எழுந்ததும் இந்தச் சமுதாயமே.
இது போன்ற நிலையை முஸ்லிம் சமுதாயம் சந்தித்த போது, இதன் தலைவர்கள் நடந்து கொண்ட முறையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
 
பள்ளிவாசலுக்கு உரிமை கொண்டாடிய மதவெறி பிடித்த கும்பல், இரவோடிரவாகப் பள்ளிவாசலுக்குள் சிலைகளைக் கொண்டு போய் வைத்தது! இது நடந்தது காங்கிரஸ் ஆட்சியில். அதன் பின்னர் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தத் தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் இதுவும் நடந்தது. பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை செய்ய அனுமதியளிக்கப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில் தான். நேருவும் அவரது பரம்பரையும் ஆண்ட காலங்களில் நடந்த இந்த அக்கிரமத்தைச் சமுதாயத்தின் கவனத்துக்கொண்டு சென்று அவர்களை ஒன்று திரட்ட வேண்டிய முஸ்லிம் லீக் தலைவர்கள், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தனர். இந்த அக்கிரமம் பற்றிய செய்தி மக்களுக்குச் சென்று விடாமல் பார்த்துக் கொண்டனர். ஐந்தாறு தலைவர்களுக்குப் பதவிகளை வழங்கி விட்டால், முஸ்லிம் சமுதாயத்தின் எந்த உரிமைகளையும் பறிக்கலாம் என்ற நிலையைத் தோற்றுவிக்கக் கூடிய தலைவர்களைத் தான் இந்தச் சமுதாயம் பெற்றது.
 
அதன் பின்னர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசு அதற்குப் பரிபூரண ஆசியும் ஒத்துழைப்பும் வழங்கியது. அதே காங்கிரஸ் ஆட்சியில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் எழுப்பபட்டது. 

வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸுடன் தோள் கொடுத்து நிற்பவர்கள் இந்தச் சமுதாயத்தின் தலைவர்களாகப் பவனி வருகிறார்கள்.
 
கேரளாவில் அரசைத் தாங்கிப் பிடித்திருப்பவர்கள் இந்த சமுதாயத் தலைவர்கள் தாம். இந்த துரோகத்தை முஸ்லிம் சமுதாயம் சீக்கரமே மறந்து விடக் கச்சிதமாகக் காரியங்கள் ஆற்றி வருபவர்களாகவே இந்தச் சமுதாயத்தின் தலைவர்கள் உள்ளனர்.
 
அவர்களோ வருமுன் காக்கப் பொங்கி எழுகின்றனர். இவர்களோ வந்த பின்னும் சமுதாயத்தைத் தாலாட்டி உறங்க வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு பள்ளிவாசலை விட்டுக் கொடுத்தால் என்ன என்று கேட்கின்ற கோழைகளும் துரோகிகளும் இங்கே இருப்பது போல் அங்கே இல்லை.
 
‘பாபர் மசூதியைப் பற்றிப் பேசப் போகிறார்கள்’ என்று நீதிமன்றத்தில் முறையிட்டு இஸ்லாமிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை வாங்கும் நயவஞ்சகர்கள் அங்கே இல்லை.
 
சமுதாயத்திற்காகக் குரல் கொடுப்பவர்களைத் தீவிரவாதிகள் என்று காட்டிக் கொடுக்கும் கயவர்களும் அங்கே இல்லை.
 
சமுதாயத்தைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்சினைகளில் கூட ‘அவனைச் சேர்க்கக் கூடாது; இவனைச் சேர்க்கக் கூடாது’ என்று முறுக்கிக் கொள்பவர்களும் அங்கே இல்லை.
 
ஷரீஅத்தைப் பாதுகாக்கும் கூட்டங்களையே பிழைப்புக்கு வழியாக்கி, ‘தந்தி மணியாடரில் 1000 ரூபாய்கள் அனுப்புக’ என்று கேட்கும் சமுதாயத் தலைவர்கள் இங்கே இருப்பது போல் அங்கே இல்லை.
 
எல்லா வேறுபாடுகளையும் மறந்து, பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி, கிறித்துவ சமுதாயம் அழுத்தமாகத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது.
 
இந்த உணர்வுகளை முஸ்லிம் சமுதாயம் இனியாவது பெறும் என எதிர்பார்க்கிறோம். சமூகத்தை காட்டித் தங்களை வளர்த்துக் கொண்ட தலைவர்களை இனியாவது அடையாளம் காண வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
 
கிறித்துவ மதத்தினரின் இம்மாநாடுகள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமன்றி, வேறு சிலருக்கும் ஓர் உண்மையைத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றன.
 
‘இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கிறித்தவ மதத்தில் சேர்வதால் அவர்கள் மீது குத்தப்பட்ட கீழ்ச்சாதி முத்திரை அழிந்து விடுவதில்லை. அவர்களது சாதி மறைந்து விடுவதில்லை. இந்து மத்திலிருந்து கிறித்தவ மதத்துக்கு மாறும் ஹரிஜன் ஒருவர் ‘கிறித்தவ ஹரிஜன்’ என்றே அழைக்கப்படுகிறார். மற்ற சாதியினரின் நிலையும் இதுதான்’ என்று இம்மாநாடுகளில் பேசிய கிறித்தவ அறிஞர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இதைக் காரணம் காட்டியே சலுகைகள் நீடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
 
இவ்வளவு விழிப்புடனும் சமுதாயப் பொறுப்புடனும் நடக்கும் கிறித்தவ சமுதாயத்திற்கு ஓர்  உண்மையை நாம் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
 
தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களுக்குச் சலுகைகள்(?) அளித்துள்ளனர், ஆட்சியாளர்கள். பள்ளிவாசலை இடித்ததை நியாயப்படுத்துகின்ற புதுப் பெரியவாலின் காலில் வீழ்ந்து கிடக்கின்ற அரசியல்வாதிகள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதென்பது சாத்தியமில்லை என்பதை உணருங்கள்!
 
அப்படியே உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சலுகைகளைத்தான் பெற்றுத் தர முடியுமே தவிர, அவர்கள் மீது காலம் காலமாகக் குத்தப்பட்ட கீழ்ச்சாதி முத்திரையை உங்களால் அழிக்க முடியாது. ஒரு இழிவிலிருந்து மீண்டும் அதே மாதிரியான இன்னொரு இழிவைத்தான் அந்த மக்கள் மீது நீங்கள் சுமத்துகிறீர்கள்!
 
கிறித்தவ மதத்திலும் சாதிகள் உள்ளன. அவற்றிக்கிடையே உயர்வு தாழ்வுகள் இருக்கின்றன என்று அந்த மாநாடுகளில் உங்கள் தலைவர்களும் மத குருமார்களும் முழங்கியதே இதற்குச் சான்று!
 
மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமானால் — அவனது சாதிகள் மறைய வேண்டுமானால் — சாதிகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமையையும் சுத்தமாகத் துடைத்தெறிகின்ற இஸ்லாத்தின் பால் வாருங்கள்! இங்கே முஸ்லிம் ஹரிஜன் இல்லை! முஸ்லிம் முதலியார் இல்லை! எங்கிருந்து வந்தார்கள் என்பதையே மறக்கச் செய்யும் உயரிய தத்துவம் இஸ்லாம் மட்டுமே!
 
இதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களின் விழிப்புக்கு அர்த்தமிருக்கும். விழித்துக் கொண்டு கிணற்றில் விழுவதை விட உறக்கம் மேலல்லவா என்பதை உணருங்கள்!
 
தீண்டாமையிலிருந்து விடுபடத் துடிக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் இதையே சொல்கிறோம். உறங்கிக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமுதாயமும் விழிக்காத கிறித்தவ சமுதாயமும் விழிப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமுதாயமும் இங்கு கூறப்பட்ட உண்மைகளை உணர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.’
 
அவரது இத்தகைய ஓயாத சமூக உணர்வலைகள் பின்னாளில் கழக உருவாக்கத்திற்குக் காளாக அமைந்தது. எனினும், அவர் உருவாக்கியவற்றால் பலர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அனைத்தையும் துறந்தார். ஏகத்துவ இளம் பிரசாரகர்களின் இடைவிடாத பிரசாரத்தால் வளர்க்கப்பட்ட கழகத்தை பதவி ஆசையற்ற அவர் நம்பி பொறுப்பை ஒப்படைத்த கழகத் தலைமைகள் இன்று ஏகத்துவத்திற்கு எதிராக கலகம் பண்ணும் துரோகத்தை செய்து கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுத் துரோகத்தை என்றும் வரலாறு மறக்கவும் மன்னிககவும் மாட்டாது. கழக உருவாக்கமும் துரோகமும் பற்றிய அத்தியாயத்தில் அவற்றை விரிவாக அலசுவோம்.
 
பல ஆய்வு நூல்களை எழுதி, அறிவுக்குப் பங்களிப்புச் செய்து, பிரபல்யம் பெற்றவர்கள் பலரை, வரலாறு தன்னுள் பதிவு செய்துள்ளது. அவர்களில், அதிகமானவர்கள் தம் மூளையிலேயே வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். எழுதுகோலால் தடுத்த அளவு கூட தீமைகளைத் தடுக்க களத்திற்கு அவர்களில் அதிகமானவர்கள் வரவில்லை.

இன்றை பல அரபு நாட்டு அறிஞர்களைக் கூட இதற்கு உதாரணம் காட்ட முடியும். ஆட்சியாளர்களின் தவறை அவர்கள் விமர்சிப்பதில்லை. துணிந்து விமர்சித்தவர்கள் சிலரின் முகவரி தொலைக்கப்பட்டுள்ள வரலாறும் உள்ளது.

ஆனால், சமூக சீர்திருத்தவாதிகள் அறிவுப்பணியோடு மட்டும் தம் சிந்தனையை சுருக்கிக் கொள்வதில்லை. சமூகத்தில் தலைவிரித்தாடும் மடமையின் கொடுமைகளைக் காணும் போது, அவர்களின் உள்ளத்தில் எரியும் உணர்ச்சிவேகம், அவ்வாறு மவ்னியாகி, அவதானிகளாக மட்டும் நின்றுவிட அவர்களை விடுவதில்லை. சூழலில் உள்ள தீமைகளையும் ஆட்சியாளர்களின் அநியாயங்களையும் தலைவர்களின் தகிடுதத்தங்களையும் அவர்களால் பார்த்துச் சகிக்க முடிவதில்லை. ஏகத்துவக் கொள்கை, நடைமுறை வாழ்விலும் பரந்த பூமியிலும் அது வாழ வேண்டும் என்ற உணர்ச்சி பூர்வமான வேகம் அவர்களிடம் காணப்படும். எனவே, அவர்கள் அசத்தியக் கோட்டை நடுவே நின்று கொண்டு தம் இன்னுயிரையும் மதிக்காது தீமைகளை எதிர்த்துப் போராடுவார்கள்.

இத்தகைய ஏகத்துவப் போராளியாக தனது துணிகரமான பேச்சால், எழுத்தால், சமுதாயப் பணியால் பீஜே ஆற்றிக் கொண்டிருக்கும் பணி மிக முக்கியமாக அவதானத்திற் கொள்ளப்பட வேண்டும். அவரது பிரச்சார வரலாற்றில் இதற்கான நிறைய சம்பவங்களைக் கூற முடியும்.

முதல் தடவை பீஜே இலங்கை வந்த போது, தும்மலசூரியவில் அமைந்துள்ள அகதியாக் கலாபீடத்தில் அவர் உரையாற்றும்போது, அசத்தியக் கும்பல் தடைகளை ஏற்படுத்தியது. நாங்கள் இந்த பனங்காட்டு நரிகளுக்குப் பயந்தவர்களில்லை என்ற அடிப்படையில் கூக்கிரலிட்டவர்களுக்கு அவர்களுக்குப் புரியும் அவர்களின் அதே பாணியில் பதில் அளித்தார். 

ஒருவருக்கு தனது சொந்த நாட்டில்  தைரியம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பீஜே கால் வைத்த அத்தனை இடங்களிலும் அவரை நோக்கி வந்த பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் துணிவாக முகம் கொடுத்தார். இதுவரை அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளப் பின்னின்றதில்லை. 

20-03-2005 அன்று இலங்கை அக்குருணையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் பழைமை விரும்பிகளின் தூண்டுதலால், கற்கள் தன் மேனியைப் பதம் பார்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்ட போதும், மத்ஹப்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மேடையிலிருந்து இறங்க மாட்டேன் என்ற உறுதி இதற்கோர் அண்மைய, இலங்கை மக்கள் நேரடியாகப் பார்த்த  உதாரணமாகும்.

இது போன்ற பல சம்பவங்களை அவரது பிரச்சார வாழ்வு முழுதும் அவதானிக்கலாம்.

வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்…

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்